Monday 20 May 2013

☠ - 3 பேர் 3 கடத்தல்!!! (கடைசி பாகம்)


இடுக்கையின் முதல் பகுதியை படிக்க கீழே சொடுக்கவும்...

☠ - 3 பேர் 3 கடத்தல்!!!

2013 மே 6 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில், செமோர் அவென்யூவில் அமைந்துள்ள தனது வீட்டில் சார்ல்ஸ் ராம்சே, மக்டோனல்ட் உணவை சுவைக்க ஆயுத்தமாகும் போது, அருகாமையில் உள்ள வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் சத்தம் வருவதை கேட்டிருக்கிறார். 'பிக் மாக்' உணவை கையில் பிடித்து கொண்டே என்ன, ஏது என்று பார்க்க சத்தம் வந்த திசையை நோக்கி ஓடுகிறார். அது ஏரியல் காஸ்ட்ரோவின் 2207 ஆம் இலக்க வீடு.

 



அந்த வீட்டின் பாரிய முன் கதவின் இடுக்கின் வழியாக ஒரு பெண் வெறித் தனமாக வெளியே வர உதவுமாறு கத்துவதை  பார்க்கிறார். கதவை தள்ளி பார்க்கிறார் அது திறக்கவில்லை. பெண்ணோ "தயவு செய்து காப்பாற்றுங்கள்; நான் நெடுங்காலம் உள்ளே அடைந்து கிடக்கிறேன்" என்று கதறுகிறார். கதவை திறக்க முடியாததால் அதன் அடிப்பகுதியை உடைத்து பெண்ணை வெளியே எடுக்கிறார்கள் ராம்செயும், சத்தம் கேட்டு அங்கு கூடி விட்டவர்களும். கூடவே ஒரு சிறுமியும் வெளியே வருகிறாள். வெளியே வந்த பெண் "தயவு செய்து 911 (போலீஸ்)ஐ கூப்பிடுங்கள் நான் தான் அமெண்டா பெரி என்கிறாள்". கூடியிருந்தவர்கள் ராம்சே உட்பட ஒரு கணம் திகைத்து போகிறார்கள்.


தொடர்ந்து ராம்சே கைபேசியில் காவல் துறை கட்டுபாடகத்துக்கு அழைப்பு விடுத்து பேசுகிறார். அதன் பதிவின் எழுத்து வடிவம் கீழே...


 இதனை தொடர்ந்து அமெண்டா பெரி காவல் துறையுடன்   பேசிய பதிவின் எழுத்து வடிவமும் கீழே....


 இதனை தொடர்ந்து காவல் துறையினர் வந்து அமெண்டா மற்றும் சிறுமியை மீட்பதோடு அல்லாமல் அந்த வீட்டின் நிலவறைகளில் (basement) இருந்து மேலும் இரண்டும் பெண்களையும் மீட்கிறார்கள். சில நிமிடங்களில்  மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் காணாமல் போய் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு 6 வயது மதிக்க தக்க  சிறுமியுடன் மீட்கப்பட்டதாக  செய்திகள் உலகெங்கும் பரவுகின்றன.

 *   *   *

அதுவரை க்ளீவ்லேண்டில், ஹட்ஜெஸ் எனும் உணவகத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த சார்ல்ஸ் ராமசேவை, இந்த மீட்பு நடவடிக்கைக்கு பின், அமெரிக்க ஊடகங்கள் ஹீரோவாக கொண்டாட தொடங்கி விட்டன. அவரின் பேசும் லாவகமும், உதிர்த்த சில தத்துவ முத்துக்களும் அவரை இன்டநெட்டிலும் பிரபல படுத்தி விட்டன. அப்படி ஒரு முத்து தான் மேலே பதிவின் முதல் படமாக உள்ளது. ஏரியல் காஸ்ட்ரோவை பற்றி கேட்ட போது ராம்சே கூறியது...

'I've been here a year. I barbeque with this dude, we eat ribs and what not and listen to salsa music. He's somebody you look and then you look away because he's just doing normal stuff. You got some big testicles to pull this one off."

பலர் உங்களை ஹீரோவாக கொண்டாடுகிறார்களே என்று கேட்ட போது அவர் கூறியது...
  
'Bro, I’m a Christian, an American, and just like you. We bleed the same blood, put our pants on the same way."

இப்போது அவர் வாழ்க்கையை பற்றி கேட்ட போது...

'Up until yesterday, the only thing that kept me from losing sleep was lack of money. You know what I'm saying? But now that that's going on and I think I could have done this last year...'.

மேலும் இது சம்பந்தமாக தனக்கு எந்த பரிசும் வேண்டாம் என்றும் அப்படி யாரும் தர முன் வருபவர்கள் அந்த பெண்களுக்கே அனைத்தையும் கொடுக்கவும் என்றும் சொல்கிறார் ராம்சே.  


ராம்சேயின் வீர தீரத்தை மெச்சி அவர் வேலை செய்த ஹட்ஜெஸ் உணவகம் அவர் பெயரில் பர்கர்  ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது. 


இருப்பினும், ராம்சேயின் மற்றும் ஒரு அயலவரான ஆங்கிலம் தெரியாத ஸ்பானிய மொழி மட்டுமே பேசும் எஞ்சல் கொர்டேரோ என்பவர், அவர் தான் முதலில் வந்து கதவை உடைத்ததாகவும், அதன் பின்பு தான் ராம்சே அங்கு வந்ததாகவும் பேட்டி கொடுத்திருகிறார். ஆனால் ராம்சே பிரபலமானதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அந்த பெண்களை காப்பாற்றிய செய்கை ஒன்றே தனக்கு ஆத்மா திருப்தி அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். 

இன்னும் ஒரு செய்தியோ ராம்சே 1997, 1998, 2003 ஆம் ஆண்டுகளில் மனைவியை துன்புறுத்தியதற்காக ராம்சே கைது செய்யப் பட்டிருந்தார் என்றும் கூறிகிறது.

*   *   *

மீட்கப்பட்ட பெண்களையும் சிறுமியையும் காவல் துறையினர் வைத்திய சாலையில் அனுமத்தித்து, விசாரிக்கிறார்கள். அதில் அந்த சிறுமி 6 வயதுடைய ஜோஸ்லீன், அமேண்டாவுக்கும், ஏரியல் காஸ்ட்ரோவுக்கும் பிறந்தது என்று அறிகிறார்கள். ஜோஸ்லீனை மாத்திரம் காஸ்ட்ரோ சில நேரங்களில் வெளியில் அழைத்து சென்று வருவதாகவும் கூறி இருக்கிறார் அமெண்டா. ஆறு வருடங்களுக்கு முன் ஒரு கிறிஸ்மஸ் நாளில், குளியல் தொட்டியில் ஜோஸ்லீனை பெற்றதாகவும், அதற்க்கு மற்றைய பெண்கள், குறிப்பாக மிஷெல் உதவியதாகவும் சொல்லி இருக்கிறார். அதன் பின் ஜோஸ்லீன்க்கு தானே வீட்டில் பாடம் சொல்லி கொடுத்து வந்ததாகவும் சொல்கிறார்.

அமேண்டாவும், ஜோஸ்லீனும் பலகீனமாக காணப்பட்டாலும், உடல் ரீதியாக நல்ல நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். அதனால் தான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே வீடு செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். கூடவே அவர்கள் புகைப்படமும் வெளியிடப்பட்டது. சகோதரியுடன் அமெண்டாவும் (நடுவில்), சிறுமி ஜோஸ்லீனும் கீழே... 



சிறுமி ஜோஸ்லீன் தனது குழந்தை என்பதாலும், அமெண்டா அவர் தாய் என்பதாலும் காஸ்ட்ரோ அவர்கள் இருவரிடமும் சற்று கருணையுடனும், அன்புடனும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மிஷெலினதும், ஜினாவினதும் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் இருவரினது புகைப்படங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. காரணம் இருவரையும், பட்டினி போட்டும் , மாதக்கணக்கில் சங்கிலியால் பிணைத்தும் கொடுமை படுத்தி இருக்கிறான் காஸ்ட்ரோ. இவர்களில் யாராவது அவனால் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் வருத்தியும், வயிற்று பகுதியில் கண் மூடித்தனமாக அடித்தும் அவர்களுக்கு கருச்சிதைவு செய்து விடுவானாம். அவர்களில் ஒருவருக்கு கேட்கும் திறன் அற்றுப் போயிருப்பதாகவும், இன்னொருவருக்கு கழுத்தை திருப்ப முடியாது இருப்பதாகவும் உறதி படுத்தாத செய்தகள் கூறுகின்றன. இவர்களுடைய உருவங்கள் சற்று விகாரமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்கு நீண்ட நாள் மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அது வரை அவர்களை பொது மக்களின் கண்ணில் இருந்து மறைத்து வைக்கவே காவல் துறை அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. 

அதனால் தானோ என்னவோ ஜினா உடலை முற்றாக மூடிய நிலையிலான அங்கி அணிந்து வீடு திரும்பியிருக்கிறார். அந்த படக்காட்சி கீழே...




மூவரில்  மிஷெல் தான் அதிகப் படியான சித்திரவதைக்கு உள்ளானதாக தெரிகிறது. மேலும் அவர் குடும்பத்திற்கும் அவருக்கும் 10 வருடங்களுக்கும் முன்பே நல்ல உறவு இல்லை. தற்போது சக்கர நாற்காலில் இருக்கும் அவர் பேத்தி ஒருவர் தான் மிஷேலின் உறவினராக அறியப்படுகிறார். அவர் அம்மாவும் வேறு திருமணம் செய்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே மிஷெல் விருப்பப்படி, அரசே அவரை ஒரு காப்பகத்தில் வைத்து பராமரிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

*   *   *

காஸ்ட்ரோ சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விசார்க்கப்பட்டனர். இவர்களில் ஏரியல் காஸ்ட்ரோவை தவிர மற்றைய இருவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். இந்த கடத்தல்களில் ஏரியல் காஸ்ட்ரோ மட்டுமே தனியாக செயல் பட்டதாக காவல் துறை நம்புகிறது.


யாரிந்த ஏரியல் காஸ்ட்ரோ? போட்டோ ரிக்கோ நாட்டில் இருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் தான் இவன் குடும்பம். தற்போது 52 வயதான காஸ்ட்ரோ முன்னாள் பள்ளி பஸ் ஓட்டுனர். ஓட்டுனராக இருந்த போது கவன குறைவாக நடந்து கொண்டமைக்காக முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளான். உள்ளூர் பப்பில் கிட்டார் வாசிப்பாளராக இருந்திருக்கிறான். அவனை அறிந்தவர்கள், ராம்சே உட்பட,  'இவனா அவன்!' என்று ஆச்சரியப்பட்டு போகிறார்கள். மே 2 ஆம் திகதி என்ன காரணத்தினாலோ தனது 'பேஸ்புக்'கில்  'Miracles really do happen, God is good :) '  என்று எழுதியிருக்கிறான்.

அந்த வீட்டில் அவன் தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறான். எப்போதுமே அவன் தன் மோட்டார் சைகிளையோ, அல்லது 'பிக் அப்' வண்டியையோ  வீட்டின் பின் புறமாக நிறுத்திவிட்டு, பின் கதவு வழியாகவே வீட்டினுள் செல்வதாக அயலவர் கூறியுள்ளனர். வீடு எப்போதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாகவும் , எப்போதாவது முன் புறம் ஒரு சிறிய  மின் விளக்கு எரிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 



சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காஸ்ட்ரோ தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் எனபதால் 24 மணி நேர கண்காணிப்பிலேயே இருக்கிறான். நீதி மன்றத்தில் வழக்கு வரும் வரை, அவன் செய்த கடத்தல்களின் பின்னணி வெளியுலகுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களும் சாட்சியம் சொல்லும் வரை அவர்களை 10 வருடமாக இன்னும் எவ்விதமான சித்திரவதைகளை காஸ்ட்ரோ செய்தான் என்பதும் அறிய முடியாது.

இது இவ்வாறாக இருப்பினும் காஸ்ட்ரோ போன்ற மனபிறழ்வு உள்ளவர்கள் வாழும் இதே பூமியில் தான் நாம் குழந்தைகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்று எண்ணும் போது, பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை!




4 comments:

  1. ராம்சே பெயரில் உணவகம் திறந்திருப்பது சரி... ஆனால் அவர் கைது செய்யப்பட்ட தகவலும் கவனிக்க வேண்டும்...

    10 வருடம் திகைக்க வைக்கிறது... பல காஸ்ட்ரோக்கள் நாட்டில் அதிகமாகிக் கொண்டிருக்கிறதும் உண்மை - 'குடி' என்கிற மனநோயால்...!

    ReplyDelete
    Replies
    1. தற்போது ராம்செவுக்கு வாழ் நாள் முழுவதும் பர்கர் இலவசம் என்று மக் டொனல்ட் அறிவித்திருக்கிறது. ஒரு வேளை ராம்சேயின் நிலை 'சென்னையில் ஒரு நாள்' சேரன் நிலையில் கூட இருந்திருக்கலாம்.

      குடி பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி திரு தனபாலன்.

      Delete
  2. உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!

      Delete

உங்கள் கருத்து...