Monday 27 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 4

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 3

Catapult assisted Take off - இதை எனக்கு தெரிந்த தமிழில் "கவண் மூலம் விண் மேவுதல்" என்று எழுதலாம் என்று எண்ணுகிறேன். பொதுவாக ஒரு விமானத்தை விண்ணில் செலுத்த தேவையான உந்து சக்தியை அதனுடைய இயந்திரங்கள் வழங்குகின்றன. அந்த உந்து சக்தியை அடையும் வரை விமானத்தை விண்ணில் கிளப்ப முடியாது. அந்த உந்து சக்தியை அடைய விமானங்கள் தரையில் குறிப்பிட்ட வேகத்தை அடையவேண்டும். அதற்காக அவை சில ஆயிரம் மீட்டர் தூரம் ஓடுகின்றன. இது சாதாரண நடைமுறை. பல விமானங்கள் அவ்வாறு ஓடி விண் மேவினாலும், உலகின் மிகப்பெரிய சோவியத் தயாரிப்பு விமானமான Antonov 225 விண் மேவும் அழகே அழகு. அதன் படக் காட்சி கீழே ...



 Antonov 225 பற்றி இங்கு ஒன்று சொல்லியே ஆகவேண்டும். சில வருடங்களுக்கும் முன் எதிர் பாராத விதமாக, இந்த விமானத்தை மிக மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பமும், பின் அது விண்ணில் பறந்து செல்வதை ஓடு பாதை அருகே இருந்து பார்க்கும் சந்தர்பமும் கிடைத்தது. அந்த ஆச்சரியத்தில் இருந்து இன்று வரை என்னால் விலக முடியவில்லை. பிரமாண்டம் என்றால் அப்படி ஒரு பிரமாண்டம். விமானத்தை தாங்கி நிற்க 32 சக்கரங்கள். முன் இறக்கையின் ஒரு முனையில் இருந்து மறு முனை 88.4 மீட்டர். 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல கூடிய திறன். அது விண்ணில் எழும் போது ஒரு பெரிய கட்டிட தொகுதியே விண்ணில் எழும்பியது போல் இருந்தது..மனிதனின் படைப்பாற்றல் தான் எத்தனை வலிமையானது என்று எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை.


இனி நம் கதைக்கு வருவோம். மேல் கூறியவாறு ஓடு பாதை மூலமாக விமானகள் விண் மேவினாலும், கீழ் வரும் மூன்று தருணங்களை சாமளிக்க கவண் (Catapult) கருவி பயன் படுத்த படுகிறது.

1. ஒவ்வொரு விமானத்திற்கும் 'Maximum take off weight ' எனும் ஒரு அளவுகோல் உண்டு. விதிவிலக்காக சில சமயங்களில் அந்த குறிப்பிட்ட எடையை விட அதிகம் எடை சுமந்து செல்ல வேண்டுமானால் கவண் உபயோகிக்கப் படுகிறது.

2. ஜெட், புரொபல்லர் இயந்திரங்களுக்கு போதிய திறன் அற்று போகும் நேரங்களிலும் கவண் பயன் படுத்தப் படுகிறது.

3. ஓடு பாதை சிறியதாக இருக்கும் போது முக்கியமாக கவண் பயன் படுத்த படுகிறது. குறிப்பாக இராணுவ தளங்களிலும், விமான தாங்கி கப்பல்களிலும் ஓடு பாதை மிக குறுகியது, விமானம் அந்த குறகிய பாதையில் ஓடி விண்ணில் எழுவதற்கான உந்துதலை பெற முடியாது. அதனால் தான் கவண் மூலம் விமானத்திற்கு அதிகபடியான வேகத்தை செலுத்தி விண்ணில் பறக்க வைக்கிறார்கள்.

 
  
Arrestor wire Landing  - இதை 'கம்பிகள் மூலம் சிறைபிடித்து தரையிறக்கள்' என்று தமிழ் படுத்தினால் குறை இல்லை என்று நம்புகிறேன். ஒரு விமானம் தரை தட்டும் போது அதன் வேகத்தை குறைத்து முற்றாக ஓய்வுக்கு கொண்டு வர குறிப்பிட அளவு ஓடு பாதை தூரம் தேவை. ஆனால் விமான தாங்கி கப்பல் போன்றவற்றில் குறுகிய ஓடு பாதையே இருப்பதால், விமானத்தின் வேகத்தை சில நொடிகளிலேயே கட்டு படுத்தி ஓய்வுக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு சில நொடிகளில் கட்டுப்படுத்த விமானத்தில் பொருத்தியிருக்கும் சாதனங்களால் முடியாது. எனவே தான் புறச்சாதனங்களை கொண்டு விமானத்தை ஓய்வுக்கு கொண்டு வருகிறார்கள்.


மேலே படத்தில் உள்ளது நிமிட்ஸ் வகை விமானத்தாங்கி கப்பலின் ஓடு தளம். குறிப்பாக தரை இறங்குவதற்கு ஒரு பிரத்தியேக ஓடு பாதையும், விண்ணில் ஏவுவதற்கு இரண்டு ஓடு பாதைகளும் பயன் படுத்துவார்கள்.

விமானத்தாங்கி கப்பல்களில் விமானத்தை உடனடியாக நிறுத்த பயன் படுத்தும் ஒரு முறை தான் கம்பிகள் மூலம் சிறை படுத்தல். இதற்கு ஓடு பாதையின் குறுக்கே கம்பிகளை பொருத்தி விடுகிறார்கள். அந்த கம்பிகள் நீராவி அழுத்தத்தில் இயங்கும் உருளைகளுடன் (cylinder ) இரு புறமும் இணைக்கப்பட்டுள்ளன. விமானம் தரை இறங்கும் போது குறுக்கே இருக்கும் கம்பிகளுடன் கொக்கியை மாட்டி விமானத்தை இழுத்து நிறுத்துகிறார்கள். முதலில் எனக்கு "இப்படி கூட செய்வார்களா?" என்று தான் தோன்றியது. நம்புவதற்கு கடினமாயினும் அது தான் உண்மை. அதற்க்கான படம் இதோ...


சில நேரங்களில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, விமானியினால் முற்றாக விமானத்தை கட்டு படுத்த முடியாத போது, இரும்பினால் ஆனா ஒரு வகை வலையை பயன் படுத்தி விமானத்தை நிறுத்துகிறார்கள் இப்படி...



இப்போது சொல்லுங்கள், நாம் USS ஏபிரகாம் லிங்கனுக்கு விமானம் மூலன் தான் செல்கிறோம் என்று தெரிந்தவுடன் கிலி கொள்ளாமல் வேறு என்னதான் செய்யும். விண்ணில் ஏவப்படும் போது கவண் மூலம் தேவையான வேகம் கிடைக்காவிடில் விமானம் அப்படியே கடலினுள் சென்றுவிடும். அதே போல் தரை இறங்கும் போது கொக்கியில் இரும்பு வடம் மாட்டாமல் போனால் ஓடு பாதையின் முடிவில் இருக்கும் ஆழ கடலில் விமானத்துடன் மூழ்க வேண்டி வரும். இருப்பினும் வாழ்க்கையில் கிடைத்த ஒரே சந்தர்பத்தை நழுவ விட மனம் இல்லாமலும், அமெரிக்க கடற்படையின் விமானம் மற்றும் விமானிகள் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் விமான பயணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் வீட்டில் உள்ளோருக்கு இந்த ஏறுதல், தரை இறங்குதல் பற்றி எதுவும் சொல்லாமல் தயாரானேன். அந்த நாளும் வந்தது!

.தொடருவேன்...

Monday 20 May 2013

☠ - 3 பேர் 3 கடத்தல்!!! (கடைசி பாகம்)


இடுக்கையின் முதல் பகுதியை படிக்க கீழே சொடுக்கவும்...

☠ - 3 பேர் 3 கடத்தல்!!!

2013 மே 6 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில், செமோர் அவென்யூவில் அமைந்துள்ள தனது வீட்டில் சார்ல்ஸ் ராம்சே, மக்டோனல்ட் உணவை சுவைக்க ஆயுத்தமாகும் போது, அருகாமையில் உள்ள வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் சத்தம் வருவதை கேட்டிருக்கிறார். 'பிக் மாக்' உணவை கையில் பிடித்து கொண்டே என்ன, ஏது என்று பார்க்க சத்தம் வந்த திசையை நோக்கி ஓடுகிறார். அது ஏரியல் காஸ்ட்ரோவின் 2207 ஆம் இலக்க வீடு.

 



அந்த வீட்டின் பாரிய முன் கதவின் இடுக்கின் வழியாக ஒரு பெண் வெறித் தனமாக வெளியே வர உதவுமாறு கத்துவதை  பார்க்கிறார். கதவை தள்ளி பார்க்கிறார் அது திறக்கவில்லை. பெண்ணோ "தயவு செய்து காப்பாற்றுங்கள்; நான் நெடுங்காலம் உள்ளே அடைந்து கிடக்கிறேன்" என்று கதறுகிறார். கதவை திறக்க முடியாததால் அதன் அடிப்பகுதியை உடைத்து பெண்ணை வெளியே எடுக்கிறார்கள் ராம்செயும், சத்தம் கேட்டு அங்கு கூடி விட்டவர்களும். கூடவே ஒரு சிறுமியும் வெளியே வருகிறாள். வெளியே வந்த பெண் "தயவு செய்து 911 (போலீஸ்)ஐ கூப்பிடுங்கள் நான் தான் அமெண்டா பெரி என்கிறாள்". கூடியிருந்தவர்கள் ராம்சே உட்பட ஒரு கணம் திகைத்து போகிறார்கள்.


தொடர்ந்து ராம்சே கைபேசியில் காவல் துறை கட்டுபாடகத்துக்கு அழைப்பு விடுத்து பேசுகிறார். அதன் பதிவின் எழுத்து வடிவம் கீழே...


 இதனை தொடர்ந்து அமெண்டா பெரி காவல் துறையுடன்   பேசிய பதிவின் எழுத்து வடிவமும் கீழே....


 இதனை தொடர்ந்து காவல் துறையினர் வந்து அமெண்டா மற்றும் சிறுமியை மீட்பதோடு அல்லாமல் அந்த வீட்டின் நிலவறைகளில் (basement) இருந்து மேலும் இரண்டும் பெண்களையும் மீட்கிறார்கள். சில நிமிடங்களில்  மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் காணாமல் போய் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு 6 வயது மதிக்க தக்க  சிறுமியுடன் மீட்கப்பட்டதாக  செய்திகள் உலகெங்கும் பரவுகின்றன.

 *   *   *

அதுவரை க்ளீவ்லேண்டில், ஹட்ஜெஸ் எனும் உணவகத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த சார்ல்ஸ் ராமசேவை, இந்த மீட்பு நடவடிக்கைக்கு பின், அமெரிக்க ஊடகங்கள் ஹீரோவாக கொண்டாட தொடங்கி விட்டன. அவரின் பேசும் லாவகமும், உதிர்த்த சில தத்துவ முத்துக்களும் அவரை இன்டநெட்டிலும் பிரபல படுத்தி விட்டன. அப்படி ஒரு முத்து தான் மேலே பதிவின் முதல் படமாக உள்ளது. ஏரியல் காஸ்ட்ரோவை பற்றி கேட்ட போது ராம்சே கூறியது...

'I've been here a year. I barbeque with this dude, we eat ribs and what not and listen to salsa music. He's somebody you look and then you look away because he's just doing normal stuff. You got some big testicles to pull this one off."

பலர் உங்களை ஹீரோவாக கொண்டாடுகிறார்களே என்று கேட்ட போது அவர் கூறியது...
  
'Bro, I’m a Christian, an American, and just like you. We bleed the same blood, put our pants on the same way."

இப்போது அவர் வாழ்க்கையை பற்றி கேட்ட போது...

'Up until yesterday, the only thing that kept me from losing sleep was lack of money. You know what I'm saying? But now that that's going on and I think I could have done this last year...'.

மேலும் இது சம்பந்தமாக தனக்கு எந்த பரிசும் வேண்டாம் என்றும் அப்படி யாரும் தர முன் வருபவர்கள் அந்த பெண்களுக்கே அனைத்தையும் கொடுக்கவும் என்றும் சொல்கிறார் ராம்சே.  


ராம்சேயின் வீர தீரத்தை மெச்சி அவர் வேலை செய்த ஹட்ஜெஸ் உணவகம் அவர் பெயரில் பர்கர்  ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது. 


இருப்பினும், ராம்சேயின் மற்றும் ஒரு அயலவரான ஆங்கிலம் தெரியாத ஸ்பானிய மொழி மட்டுமே பேசும் எஞ்சல் கொர்டேரோ என்பவர், அவர் தான் முதலில் வந்து கதவை உடைத்ததாகவும், அதன் பின்பு தான் ராம்சே அங்கு வந்ததாகவும் பேட்டி கொடுத்திருகிறார். ஆனால் ராம்சே பிரபலமானதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அந்த பெண்களை காப்பாற்றிய செய்கை ஒன்றே தனக்கு ஆத்மா திருப்தி அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். 

இன்னும் ஒரு செய்தியோ ராம்சே 1997, 1998, 2003 ஆம் ஆண்டுகளில் மனைவியை துன்புறுத்தியதற்காக ராம்சே கைது செய்யப் பட்டிருந்தார் என்றும் கூறிகிறது.

*   *   *

மீட்கப்பட்ட பெண்களையும் சிறுமியையும் காவல் துறையினர் வைத்திய சாலையில் அனுமத்தித்து, விசாரிக்கிறார்கள். அதில் அந்த சிறுமி 6 வயதுடைய ஜோஸ்லீன், அமேண்டாவுக்கும், ஏரியல் காஸ்ட்ரோவுக்கும் பிறந்தது என்று அறிகிறார்கள். ஜோஸ்லீனை மாத்திரம் காஸ்ட்ரோ சில நேரங்களில் வெளியில் அழைத்து சென்று வருவதாகவும் கூறி இருக்கிறார் அமெண்டா. ஆறு வருடங்களுக்கு முன் ஒரு கிறிஸ்மஸ் நாளில், குளியல் தொட்டியில் ஜோஸ்லீனை பெற்றதாகவும், அதற்க்கு மற்றைய பெண்கள், குறிப்பாக மிஷெல் உதவியதாகவும் சொல்லி இருக்கிறார். அதன் பின் ஜோஸ்லீன்க்கு தானே வீட்டில் பாடம் சொல்லி கொடுத்து வந்ததாகவும் சொல்கிறார்.

அமேண்டாவும், ஜோஸ்லீனும் பலகீனமாக காணப்பட்டாலும், உடல் ரீதியாக நல்ல நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். அதனால் தான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே வீடு செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். கூடவே அவர்கள் புகைப்படமும் வெளியிடப்பட்டது. சகோதரியுடன் அமெண்டாவும் (நடுவில்), சிறுமி ஜோஸ்லீனும் கீழே... 



சிறுமி ஜோஸ்லீன் தனது குழந்தை என்பதாலும், அமெண்டா அவர் தாய் என்பதாலும் காஸ்ட்ரோ அவர்கள் இருவரிடமும் சற்று கருணையுடனும், அன்புடனும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மிஷெலினதும், ஜினாவினதும் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் இருவரினது புகைப்படங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. காரணம் இருவரையும், பட்டினி போட்டும் , மாதக்கணக்கில் சங்கிலியால் பிணைத்தும் கொடுமை படுத்தி இருக்கிறான் காஸ்ட்ரோ. இவர்களில் யாராவது அவனால் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் வருத்தியும், வயிற்று பகுதியில் கண் மூடித்தனமாக அடித்தும் அவர்களுக்கு கருச்சிதைவு செய்து விடுவானாம். அவர்களில் ஒருவருக்கு கேட்கும் திறன் அற்றுப் போயிருப்பதாகவும், இன்னொருவருக்கு கழுத்தை திருப்ப முடியாது இருப்பதாகவும் உறதி படுத்தாத செய்தகள் கூறுகின்றன. இவர்களுடைய உருவங்கள் சற்று விகாரமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்கு நீண்ட நாள் மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அது வரை அவர்களை பொது மக்களின் கண்ணில் இருந்து மறைத்து வைக்கவே காவல் துறை அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. 

அதனால் தானோ என்னவோ ஜினா உடலை முற்றாக மூடிய நிலையிலான அங்கி அணிந்து வீடு திரும்பியிருக்கிறார். அந்த படக்காட்சி கீழே...




மூவரில்  மிஷெல் தான் அதிகப் படியான சித்திரவதைக்கு உள்ளானதாக தெரிகிறது. மேலும் அவர் குடும்பத்திற்கும் அவருக்கும் 10 வருடங்களுக்கும் முன்பே நல்ல உறவு இல்லை. தற்போது சக்கர நாற்காலில் இருக்கும் அவர் பேத்தி ஒருவர் தான் மிஷேலின் உறவினராக அறியப்படுகிறார். அவர் அம்மாவும் வேறு திருமணம் செய்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே மிஷெல் விருப்பப்படி, அரசே அவரை ஒரு காப்பகத்தில் வைத்து பராமரிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

*   *   *

காஸ்ட்ரோ சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விசார்க்கப்பட்டனர். இவர்களில் ஏரியல் காஸ்ட்ரோவை தவிர மற்றைய இருவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். இந்த கடத்தல்களில் ஏரியல் காஸ்ட்ரோ மட்டுமே தனியாக செயல் பட்டதாக காவல் துறை நம்புகிறது.


யாரிந்த ஏரியல் காஸ்ட்ரோ? போட்டோ ரிக்கோ நாட்டில் இருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் தான் இவன் குடும்பம். தற்போது 52 வயதான காஸ்ட்ரோ முன்னாள் பள்ளி பஸ் ஓட்டுனர். ஓட்டுனராக இருந்த போது கவன குறைவாக நடந்து கொண்டமைக்காக முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளான். உள்ளூர் பப்பில் கிட்டார் வாசிப்பாளராக இருந்திருக்கிறான். அவனை அறிந்தவர்கள், ராம்சே உட்பட,  'இவனா அவன்!' என்று ஆச்சரியப்பட்டு போகிறார்கள். மே 2 ஆம் திகதி என்ன காரணத்தினாலோ தனது 'பேஸ்புக்'கில்  'Miracles really do happen, God is good :) '  என்று எழுதியிருக்கிறான்.

அந்த வீட்டில் அவன் தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறான். எப்போதுமே அவன் தன் மோட்டார் சைகிளையோ, அல்லது 'பிக் அப்' வண்டியையோ  வீட்டின் பின் புறமாக நிறுத்திவிட்டு, பின் கதவு வழியாகவே வீட்டினுள் செல்வதாக அயலவர் கூறியுள்ளனர். வீடு எப்போதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாகவும் , எப்போதாவது முன் புறம் ஒரு சிறிய  மின் விளக்கு எரிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 



சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காஸ்ட்ரோ தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் எனபதால் 24 மணி நேர கண்காணிப்பிலேயே இருக்கிறான். நீதி மன்றத்தில் வழக்கு வரும் வரை, அவன் செய்த கடத்தல்களின் பின்னணி வெளியுலகுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களும் சாட்சியம் சொல்லும் வரை அவர்களை 10 வருடமாக இன்னும் எவ்விதமான சித்திரவதைகளை காஸ்ட்ரோ செய்தான் என்பதும் அறிய முடியாது.

இது இவ்வாறாக இருப்பினும் காஸ்ட்ரோ போன்ற மனபிறழ்வு உள்ளவர்கள் வாழும் இதே பூமியில் தான் நாம் குழந்தைகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்று எண்ணும் போது, பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை!




Friday 17 May 2013

☠ - 3 பேர் 3 கடத்தல்!!!

இது ஏற்கனவே நீங்கள் படித்த செய்தியாக இருக்கலாம். இருப்பினும் பெண் குழந்தையின் பெற்றோராகவும், உறவினர், நண்பர்கள், பழகியோர் என அனைவருக்கும் அழகிய பெண் குழந்தைகள் இருப்பதாலும், நம் அயலவர்களுடன் நல் உறவுகளை பேணாது தீவு போல வாழ கற்று கொள்ளும் நிலை பெருகி வருவதாலும், நம்மிடையே எவ்வாறான மனித மிருகங்கள் உலாவி கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்  இதை எழுதுவது அவசியம் என்று தோன்றியது. 

*  *  *

2002 ஆகஸ்ட் 22 : 21 வயதான பெண் மிஷெல் நைட் ஐ கடைசியாக அவரை அறிந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நாள், மிஷெலை காணவில்லை என க்லீவ்லண்ட்  காவல் துறையினருக்கு புகார் போகிறது. ஏற்கனவே மிஷலுக்கும் அவர் குடும்பத்துக்கும் முறையான புரிந்துணர்வு இல்லாததால், அவரை 'runaway ' எனும் 'வீட்டை விட்டு வெளியேறுதல்' ஆக இருக்கலாம் எனும் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து விட்டு, புகாரை கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.
 

2003 ஏப்ரல் 21: பர்கர் கிங் உணவகத்தில் தனது பண்டியை முடித்த அமெண்டா பெரி, தனது சகோதரியை தொலை பேசியில் அழைத்து வீடு நோக்கி வர தயாராவதாக சொல்கிறார். அடுத்த நாள் அவரின் 17 ஆவது பிறந்த நாள். ஆனால் அன்றைய தினம் அமெண்டா பேசியது தான் அவரின் குடும்பத்தினருடன் ஆன கடைசி தொடர்பு. அதன் பின் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 


2004 ஏப்ரல் 2 : 14 வயதேயான ஜியோஜினா டிஜீசஸ் பள்ளி முடித்து ஒரு சிநேகிதியுடன் வீடு திரும்பும் வழியில், ஒரு கட்டண தொலைபேசியில் இருந்து சிநேகிதியின் தாயாரை அழைக்கிறார். அழைத்து தன்னுடன், தனது வீட்டில் இன்றிரவு சிநேகிதி தங்கலாமா என்று கேட்கிறார். இல்லை என்று பதில் வருகிறது. அன்று ஜினா வீடு வந்து சேரவில்லை.



இந்த மூவரும் வெவ்வேறு கால காட்டத்தில் காணாமல் போயிருந்தாலும் மூவரும் காணாமல் போனதாக கூறப்படும் இடம் ஒன்றுக்கொன்று  மிக அருகாமையில் தான் இருந்திருக்கிறது .


*  *  *

2004 ஏப்ரல் : இந்த மாதம் ஒளிபரப்பான "America's Most Wanted" என்ற எனும் அமெரிக்காவின் பழமை வாய்ந்த காணமல் போனோர் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடரில் அமெண்டா, ஜினா காணாமல் போன செய்தி இடம் பெறுகிறது. அதில் இருவரும் காணாமல் போன இடம் 'லொரெயின் அவென்யூ' என்றும் குறிப்பிட படுகிறது.



*   *   *
2004 நவம்பர் : அமெண்டாவின் தாயார் லூவானா மில்லர் மற்றொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரான "The Montel Williams Show " இல் தோன்றுகிறார். அங்கே 'Psychic' என்று மேலை நாடுகளில் கூறப்படும் ஒருவகை குறி சொல்பவரிடம் தனது மகள் குறித்து கேக்கிறார். அதற்கு அமெண்டா உயிருடன் இல்லை என்று பதில் வருகிறது. அந்த குறி சொல்பவர் சொன்ன வாக்கியம் "She's not alive, honey.".

 *   *   *

2006 மார்ச் : அமெண்டாவின் தாயார் லூவானா தனது 44 ஆவது வயதில் தன் மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமலேயே   மாரடைப்பினால் உயிரிழக்கிறார். அவரின் உற்றாரும் நண்பர்களும் மகளை இழந்த சோகமே அவர் இறப்புக்கு காரணம் என்று அடித்து கூறுகிறார்கள். 

*   *   *

2006 செப்டம்பர் : காவல் துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் க்லீவ்லண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தின் தளத்தை தோண்டுகிறார்கள்.அந்த வீடு 35 வயதான மத்தியூ ஹுரியத் எனும் பாலியல் வன்முறை குற்றவாளிக்கு சொந்தமானது.  காவல் துறை எதிர்பார்த்தது ஜினாவின் உடலை. ஆனால் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.

*   *   *
2009 :  அமெண்டா மற்றும் ஜினாவின் குடும்பத்தினர் உலக புகழ் பெற்ற "Oprah Winfrey's show " வில் தோன்றி தமது அருமை மகள்கள் பிரிந்ததை விபரிக்கிறார்கள். அவர்கள் உடல் கிடைக்கும் வரை அவர்கள் உயிருடன் தான் இருப்பதாக நம்புவதாகவும் இன்னும் தேடுவதை கைவிடவில்லை  என்றும் கண்ணீருடன் கூறுகிறார்கள்.





*   *   *

2011 நவம்பர் : க்லீவ்லண்ட்  நகருக்கு அருகே உள்ள, 2207 செமோர் அவென்யூ எனும் தெருவில் அமைந்துள்ள ஏரியல் காஸ்ட்ரோ என்பவரின் வீட்டில் இருந்து கூக்குரல் சத்தம் கேட்பதாக அயல் வீட்டவர் ஒருவர் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கிறார். காவல் துறையினர் வந்து வீட்டின் அழைப்பு மணியை அடித்து பார்கிறார்கள். யாரும் திறக்கவில்லை. திரும்பி சென்று விடுகிறார்கள்.

*   *   *

2012 மே/ஜூன் :  காஸ்ட்ரோவின் வீட்டின் அருகில் வசிக்கும் நினா சமொய்ளிக்ஸ் எனும் பெண், காஸ்ட்ரோவின் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணை நிவாணமாக பார்த்ததாக காவல் துறைக்கு தெரிவிக்கிறார். ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

*   *   *

2013 மே 5 : காஸ்ட்ரோவின் மற்றொரு அயலவர் இஸ்ரயில் லுகோ, காஸ்ட்ரோ ஒரு சிறுமியுடன் அருகில் உள்ள மைதானத்தில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறார். அருகில் சென்று யார் இந்த குழந்தை என்று கேட்க 'எனது பெண் நண்பியின் குழந்தை' என்று பதிலளிக்கிறார் காஸ்ட்ரோ.

*   *   *

 2013 மே 6 : மாலை க்லீவ்லண்ட் மட்டுமல்ல முழு அமெரிக்காவும் ஏன் உலக தொலைகாட்சிகள் முதலாக ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாகின்றன. மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் காணாமல் போய் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு 6 வயது மதிக்க தக்க  சிறுமியுடன் மீட்கப்பட்டதாக  செய்திகள் பரவுகின்றன. க்லீவ்லண்ட் செமோர் அவென்யூவில் மக்கள் கூடி விடுகிறார்கள். பலருக்கு அதிர்ச்சியில் இருந்து விலக முடியவில்லை. சிலர்  ஆனந்த கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொள்கிறார்கள். அமெண்டா மற்றும் ஜினாவின் குடும்பத்தினர், உறவினர்கள் தமது பிரார்த்தனைக்கு கடவுள் மனம் இரங்கி விட்டதாக குதூகலிக்கிறார்கள். காவல் துறையினர் மூன்று பெண்களையும் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திய சாலையில் அனுமதிக்கிறார்கள். மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் மீட்கப்பட்ட 2207 செமோர் அவென்யூ வீட்டின் சொந்தக்காரனான ஏரியல் காஸ்ட்ரோ மற்றும் அவர் சகோதரர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் தேடுவதாக காவல் துறை அறிவிக்கிறது.


 *   *   *

ஏரியல் காஸ்ட்ரோ யார்? எதற்காக மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் கடத்தப்பட்டனர்? கடந்த 10 ஆண்டுகளில் அவர்களுக்கு நடந்தது என்ன? 6 வயது சிறுமி யார்? இவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர்? போன்றவற்றை இந்த பதிவின் நீளம் அதிகரித்து விட்டதனால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

 (...அடுத்த பதிவில் முடியும்)
 

Tuesday 14 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 3

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

 ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 2

  னதில் ஒரு சிறு கணக்கு ஓடியது. SATCO சொன்னது போல நாம் ஆறு பேர் மற்றும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு சிலர் வரலாம் என கணக்கிட்டால் ஒரு உலங்கு வானூர்தியில் (Helicopter) செல்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை. மேலும் இவ்வாறான விமானங்கள் செல்வதற்கான தூரத்துக்கப்பால் கூட 'ஆபிரகாம் லிங்கன்' இருக்கலாம். அப்படியாயின் நிலையான இறக்கைகளை உடைய விமானத்தின் மூலம் தான் செல்ல வேண்டும். திடீர் என கார்ல் சொன்னது நினைவுக்கு வந்தது.


*   *   *

 கார்ல் - நோர்வேயில் 'வானிலை' குறித்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரன். அமெரிக்க குடியுரிமையும் பெற்றவன். உலகில் எங்கெல்லாம் வானிலை அவதானிப்பு நிலையம் இருக்கிறதோ அங்கெல்லாம் தன் மென்பொருள் இருக்க வேண்டும் என விரும்புபவன். அவனது 'weather graphics ' மென்பொருள் இப்போது ஐரோப்பாவின் பல முன்னானி தொலைக்காட்சி நிலையங்களில், செய்தியின் முடிவில் வானிலை பற்றி கூறும் போது பின்னணியில் பயன் படுத்துகிறார்கள். இப்போ இதற்கும் நமது கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா...சொல்கிறேன்.



கார்லின் பொழுதுபோக்கு பறத்தல். இதற்கு ஏதுவாக தனியார் விமானஒட்டி உரிமை பத்திரம் எடுத்து வைத்திருக்கிறான். இந்த உரிமை பத்திரத்தில் அனுமதிக்கப்படும் அத்தனை விமானங்களையும் ஒட்டி பார்த்துவிட வேண்டும் என்பது அவன் கனவு. அவனுடைய மென்பொருளை, குறிப்பாக இராணுவ, விமானபடை தளங்கள், பயணிகள் விமான நிலையங்கள் உபயோகிப்பாதால் அவனுக்குண்டான தொடர்புகளை பயன் படுத்தி அவனது கனவை முடிந்தளவு நனவாக்கிக் கொண்டே இருக்கிறான். 'F - 15' ரக யுத்த விமானங்களின் இரண்டு இருக்கை இருக்கும் பயிற்சி விமானத்தில் கூட பறக்கும் பாக்கியம் பெற்றவன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.



சில வருடங்களுக்கு முன் அவனுடன் ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னான், அவனது வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒரு விமானத்தில் சென்று இயக்கத்தில் இருக்கும் கப்பலின் தளத்தில் இறங்க வேண்டும். அது கிட்டாத பட்சத்தில்  அப்படி கப்பலின் மேல் தரையிறங்கும் விமானத்தில் ஒரு பயணியாகவேனும்  போகவேண்டும். 'அதில் என்ன அப்படி ஒரு சிறப்பு?' என்று அப்பாவியாக நான் கேட்ட போது ஒரு கணம் 'உன் அறிவு இவ்வளவுதானா?' என்பது போல் உற்று நோக்கியவன் சொன்னான். அதை சொல்வதை விட அனுபவித்தல் தான் தெரியும் என்றவன் அவனால் முடிந்தவரை சுருக்கமாக விபரித்தான். நான் வியப்பில் ஆழ்ந்தேன்.

*   *   *

 ப்போது ரோலர் கோஸ்டர் போன்ற கேளிக்கை சாதனங்களில் செல்லும் போது எப்படி பயமும், மகிழ்வும் மாறி மாறி வருமோ அது போன்ற நிலையில் இருந்தேன். இது வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம். ஆனால் கார்ல் கூறியதில் இருந்து அது கரணம் தப்பினால் மரணம் போன்ற சாத்தியகூறும் உண்டு. சரி என்ன ஆனாலும் போவது என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனால், வீட்டில் 'எப்படி போகிறோம்' போன்ற விபரங்கள் சொல்லாமல், வேலையில் இருந்து ஆறு பேர் கப்பலுக்கு போகிறோம்; வருவதற்கு ஒரு நாள் ஆகும் என்று மட்டும் கூறுவதாக முடிவு எடுத்து கொண்டேன்.

கார்ல் அப்படி என்ன தான் சொல்லியிருந்தான் என்கிறீர்களா? அவன் சொன்னதன் சுருக்கம் இரண்டு வாக்கியங்கள் தான்.



1. Catapults assisted Take off
    


2. Arrestor wire Landing 

   
 


இதன் விளக்கம் அடுத்த பாகத்தில்... 



...தொடருவேன். 

Monday 6 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 2

 இதன் முதல் பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்!


து 2010ஆம் ஆண்டு. ஒரு அழகிய நவம்பர் மாதம். நான் வாழும் பூகோள பகுதியில் கடும் வெப்பம் குறைந்து கடும் குளிர் ஆரம்பிக்குமுன் வரும் இதமான காலநிலையை கொண்டது தான் நவம்பர் மாதம்.ஆதலால் இங்கு நவம்பர் என்றுமே அழகிய மாதம் தான். இந்த மாதத்தில் தான் 'வியர்க்கும்', 'குளிரும்' போன்ற முறைப்படுகளின்றி அனைவரும் குடும்பத்துடன் மாலைவேளைகளை மகிழ்ச்சியுடன் 'What a beautiful weather!' என்று கொண்டாடி  புளங்காகிதப் பட்டுக்கொள்ளும் மாதம். இன்னும் சிலரோ 'A wonderful weather to walk...' என்று நடப்பதற்கான உடைகளையும் பாதணிகளையும் அணிந்து கொண்டு போகிற வழியில் உள்ள நொறுக்கு தீனிகளை எல்லாம் கொறித்து, நடப்பதால் எரித்த கலோரிகளை விட அதிகமான கலோரிகளை ஏற்றி கொள்ளும் மாதம். ஒரு வேளை நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவராய் இருந்து, கூடவே ஒரு நண்பர்கள் குளாம் இருப்பின் ஒரு BBQ Grill வாங்கி அதில் நிலக்கரியை கொட்டி, நடப்பன, பறப்பன முதல் தக்காளி, சோளம், குட மிளாகாய், cottage cheese என கையில் கிடைத்தவைகளை, அரை கால்சட்டை, பனியன், ஒரு பேஸ்பால் தொப்பி அணிந்தவாறே சுட்டு, 'This is healthy eating you know...' என்றவாறே  வெந்ததையும், வேகாததையும் கடித்து குதறி, தொண்டையில் சிக்கியவற்றை ஒரு சில பைண்ட் பீரை உள்ளே விட்டு வயிறு வரை தள்ளிக்கொள்ளும் மாதம்.   

 




அப்படியான ஒரு மாதத்தின் காலையில், என் அலுவலகத்தில் வழமை போல பணியில் ஈடு பட்டிருந்த போது இன்டர்காம் ஒலித்தது. மறுமுனையில் SATCO. விமான கட்டுப்பாட்டு தளத்தை அறிந்தோருக்கு  SATCO எனும் வார்த்தை மிக பழகியதொன்று. Senior Air Traffic COntroller ஐ தான் சுருக்கமாக SATCO என்று அழைப்பார்கள். அவரின் பணி இடம் எனது பணியிடத்தில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி தான் இருக்கிறது. அவர் என்னுடைய மேல் அதிகார படி நிலையில் (Reporting hierarchy)  இல்லையாயினும், பல திட்டபணிகளில் அவரின் கீழ் பணி புரிந்திருக்கிறேன். எந்த சிக்கலான பிரச்சனைகளையும் எளிதான சிறிய கூறுகளாய் பிரித்து பின் ஒவ்வொன்றாய் தீர்ப்பது அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.  




'Are you busy at the moment?"

என்னுடைய பல ஆண்டு கால அலுவலக அனுபவம்  இவ்வாறான கேள்விகளை சற்று எச்சரிக்கையுடனேயே அணுகவேண்டும் என்று போதித்திருந்தது. காரணம் 'No' என்று பதிலளித்தால், இவன் என்ன வேலை வெட்டி இல்லாமல் உடகார்ந்திருக்கிறான் என்று பொருள் படலாம். அதே வேளை 'Yes' என்று கூறி அவர் சொல்லவருவதை முளையிலேயே கிள்ளி விட நேரிடலாம். எனவே...

'Certainly not for you!' என்றேன்.

'I'll be there in a tick' என்று இணைப்பை துண்டித்தார்.

சில நொடிகளில் என் முன்னாள் உள்ள இருக்கையில் அவர்.

'Are you free this weekend?"

என்னடா இது... மனிதர் இன்று காலை முதல் எடக்கு முடக்காவே கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாரே என்று எண்ணியவாறே...

'Nothing planned yet.' என்றேன்.

'Thats good...'  என்றவர், தொடர்ந்து கூறியதன் சாராம்சம் இது தான்.



இன்று காலை அமெரிக்காவின் தூதரகத்தில் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், நமது நிறுவனம் அமெரிக்க அரசுக்கும் ஆயுதப்படைக்கும் செய்து வரும் சேவையை பாராட்டும் பொருட்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை பார்வையிட நம்மில் ஆறு பேருக்கு VIP நுழைவுரிமை வழங்குவதாகவும் கூறப்பட்டதாம். ஏற்கனவே நான்கு பேரை தெரிவு செய்து விட்டதாகவும், ஐந்தாவதாக என்னை கேட்பதாகவும் சொன்னார் SATCO.
 
சிறு வயதில் எல்லோரையும் போலவே எனக்கும் ஆகாய விமானங்கள், கப்பல்கள், தொடர் வண்டிகள் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தாலும், ஆகாயத்தில் விமான சத்தம் கேட்டால், அனைத்தையும் போட்டுவிட்டு ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்த்த பருவம் இன்னமும் நினைவிருக்கிறது. வயது ஏற ஏற தொடர் வண்டி ஈர்ப்பு முதல் காணாமல் போனது. பின்பு கப்பல். ஆனால் விமானங்கள் மீது இருந்த ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை. அதனால் தானோ என்னவோ, வேறு துறையில் படித்தாலும், ஒரு சில ஆண்டுகளை தவிர்த்து வேலை பார்க்கும் மீதி  அத்தனை ஆண்டுகளும் விமானங்களோடு கழிகின்றது.

இபோது திடீரென கப்பல் அதுவும் போர்க்கப்பல். அதுவும் அமெரிக்க போர்கப்பல் என்றவுடன் என் நல்ஊழை நினைத்து பொங்கி வந்த மகிழ்ச்சி வெள்ளத்தை கட்டுப்  படுத்திகொண்டு "எந்த கப்பல்?' தற்போது அப்படி ஒரு கப்பலும் நமது துறைமுகங்களில் நங்கூரமிட்டு இருக்கவில்லையே" என்றேன்.

SATCO சொன்னார்,"நீங்கள் போகவிருப்பது தற்போது வளைகுடா பகுதியில் கடமையில் இருக்கும் USS Abraham Lincoln எனும் விமான தாங்கி கப்பலுக்கு".



எனக்கு தூக்கி வாரிப்போட்டது!  


தொடருவேன்...