Friday 17 May 2013

☠ - 3 பேர் 3 கடத்தல்!!!

இது ஏற்கனவே நீங்கள் படித்த செய்தியாக இருக்கலாம். இருப்பினும் பெண் குழந்தையின் பெற்றோராகவும், உறவினர், நண்பர்கள், பழகியோர் என அனைவருக்கும் அழகிய பெண் குழந்தைகள் இருப்பதாலும், நம் அயலவர்களுடன் நல் உறவுகளை பேணாது தீவு போல வாழ கற்று கொள்ளும் நிலை பெருகி வருவதாலும், நம்மிடையே எவ்வாறான மனித மிருகங்கள் உலாவி கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்  இதை எழுதுவது அவசியம் என்று தோன்றியது. 

*  *  *

2002 ஆகஸ்ட் 22 : 21 வயதான பெண் மிஷெல் நைட் ஐ கடைசியாக அவரை அறிந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நாள், மிஷெலை காணவில்லை என க்லீவ்லண்ட்  காவல் துறையினருக்கு புகார் போகிறது. ஏற்கனவே மிஷலுக்கும் அவர் குடும்பத்துக்கும் முறையான புரிந்துணர்வு இல்லாததால், அவரை 'runaway ' எனும் 'வீட்டை விட்டு வெளியேறுதல்' ஆக இருக்கலாம் எனும் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து விட்டு, புகாரை கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.
 

2003 ஏப்ரல் 21: பர்கர் கிங் உணவகத்தில் தனது பண்டியை முடித்த அமெண்டா பெரி, தனது சகோதரியை தொலை பேசியில் அழைத்து வீடு நோக்கி வர தயாராவதாக சொல்கிறார். அடுத்த நாள் அவரின் 17 ஆவது பிறந்த நாள். ஆனால் அன்றைய தினம் அமெண்டா பேசியது தான் அவரின் குடும்பத்தினருடன் ஆன கடைசி தொடர்பு. அதன் பின் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 


2004 ஏப்ரல் 2 : 14 வயதேயான ஜியோஜினா டிஜீசஸ் பள்ளி முடித்து ஒரு சிநேகிதியுடன் வீடு திரும்பும் வழியில், ஒரு கட்டண தொலைபேசியில் இருந்து சிநேகிதியின் தாயாரை அழைக்கிறார். அழைத்து தன்னுடன், தனது வீட்டில் இன்றிரவு சிநேகிதி தங்கலாமா என்று கேட்கிறார். இல்லை என்று பதில் வருகிறது. அன்று ஜினா வீடு வந்து சேரவில்லை.



இந்த மூவரும் வெவ்வேறு கால காட்டத்தில் காணாமல் போயிருந்தாலும் மூவரும் காணாமல் போனதாக கூறப்படும் இடம் ஒன்றுக்கொன்று  மிக அருகாமையில் தான் இருந்திருக்கிறது .


*  *  *

2004 ஏப்ரல் : இந்த மாதம் ஒளிபரப்பான "America's Most Wanted" என்ற எனும் அமெரிக்காவின் பழமை வாய்ந்த காணமல் போனோர் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடரில் அமெண்டா, ஜினா காணாமல் போன செய்தி இடம் பெறுகிறது. அதில் இருவரும் காணாமல் போன இடம் 'லொரெயின் அவென்யூ' என்றும் குறிப்பிட படுகிறது.



*   *   *
2004 நவம்பர் : அமெண்டாவின் தாயார் லூவானா மில்லர் மற்றொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரான "The Montel Williams Show " இல் தோன்றுகிறார். அங்கே 'Psychic' என்று மேலை நாடுகளில் கூறப்படும் ஒருவகை குறி சொல்பவரிடம் தனது மகள் குறித்து கேக்கிறார். அதற்கு அமெண்டா உயிருடன் இல்லை என்று பதில் வருகிறது. அந்த குறி சொல்பவர் சொன்ன வாக்கியம் "She's not alive, honey.".

 *   *   *

2006 மார்ச் : அமெண்டாவின் தாயார் லூவானா தனது 44 ஆவது வயதில் தன் மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமலேயே   மாரடைப்பினால் உயிரிழக்கிறார். அவரின் உற்றாரும் நண்பர்களும் மகளை இழந்த சோகமே அவர் இறப்புக்கு காரணம் என்று அடித்து கூறுகிறார்கள். 

*   *   *

2006 செப்டம்பர் : காவல் துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் க்லீவ்லண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தின் தளத்தை தோண்டுகிறார்கள்.அந்த வீடு 35 வயதான மத்தியூ ஹுரியத் எனும் பாலியல் வன்முறை குற்றவாளிக்கு சொந்தமானது.  காவல் துறை எதிர்பார்த்தது ஜினாவின் உடலை. ஆனால் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.

*   *   *
2009 :  அமெண்டா மற்றும் ஜினாவின் குடும்பத்தினர் உலக புகழ் பெற்ற "Oprah Winfrey's show " வில் தோன்றி தமது அருமை மகள்கள் பிரிந்ததை விபரிக்கிறார்கள். அவர்கள் உடல் கிடைக்கும் வரை அவர்கள் உயிருடன் தான் இருப்பதாக நம்புவதாகவும் இன்னும் தேடுவதை கைவிடவில்லை  என்றும் கண்ணீருடன் கூறுகிறார்கள்.





*   *   *

2011 நவம்பர் : க்லீவ்லண்ட்  நகருக்கு அருகே உள்ள, 2207 செமோர் அவென்யூ எனும் தெருவில் அமைந்துள்ள ஏரியல் காஸ்ட்ரோ என்பவரின் வீட்டில் இருந்து கூக்குரல் சத்தம் கேட்பதாக அயல் வீட்டவர் ஒருவர் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கிறார். காவல் துறையினர் வந்து வீட்டின் அழைப்பு மணியை அடித்து பார்கிறார்கள். யாரும் திறக்கவில்லை. திரும்பி சென்று விடுகிறார்கள்.

*   *   *

2012 மே/ஜூன் :  காஸ்ட்ரோவின் வீட்டின் அருகில் வசிக்கும் நினா சமொய்ளிக்ஸ் எனும் பெண், காஸ்ட்ரோவின் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணை நிவாணமாக பார்த்ததாக காவல் துறைக்கு தெரிவிக்கிறார். ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

*   *   *

2013 மே 5 : காஸ்ட்ரோவின் மற்றொரு அயலவர் இஸ்ரயில் லுகோ, காஸ்ட்ரோ ஒரு சிறுமியுடன் அருகில் உள்ள மைதானத்தில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறார். அருகில் சென்று யார் இந்த குழந்தை என்று கேட்க 'எனது பெண் நண்பியின் குழந்தை' என்று பதிலளிக்கிறார் காஸ்ட்ரோ.

*   *   *

 2013 மே 6 : மாலை க்லீவ்லண்ட் மட்டுமல்ல முழு அமெரிக்காவும் ஏன் உலக தொலைகாட்சிகள் முதலாக ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாகின்றன. மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் காணாமல் போய் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு 6 வயது மதிக்க தக்க  சிறுமியுடன் மீட்கப்பட்டதாக  செய்திகள் பரவுகின்றன. க்லீவ்லண்ட் செமோர் அவென்யூவில் மக்கள் கூடி விடுகிறார்கள். பலருக்கு அதிர்ச்சியில் இருந்து விலக முடியவில்லை. சிலர்  ஆனந்த கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொள்கிறார்கள். அமெண்டா மற்றும் ஜினாவின் குடும்பத்தினர், உறவினர்கள் தமது பிரார்த்தனைக்கு கடவுள் மனம் இரங்கி விட்டதாக குதூகலிக்கிறார்கள். காவல் துறையினர் மூன்று பெண்களையும் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திய சாலையில் அனுமதிக்கிறார்கள். மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் மீட்கப்பட்ட 2207 செமோர் அவென்யூ வீட்டின் சொந்தக்காரனான ஏரியல் காஸ்ட்ரோ மற்றும் அவர் சகோதரர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் தேடுவதாக காவல் துறை அறிவிக்கிறது.


 *   *   *

ஏரியல் காஸ்ட்ரோ யார்? எதற்காக மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் கடத்தப்பட்டனர்? கடந்த 10 ஆண்டுகளில் அவர்களுக்கு நடந்தது என்ன? 6 வயது சிறுமி யார்? இவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர்? போன்றவற்றை இந்த பதிவின் நீளம் அதிகரித்து விட்டதனால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

 (...அடுத்த பதிவில் முடியும்)
 

4 comments:

  1. மனித மிருகங்கள் அதிகம் ஆகிவிட்டார்கள் எனபதும் கொடுமை... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் ஐயா!

      Delete
  2. நட்சத்திர கருத்துரையாளர் திண்டுக்கல் தனபாலன் ஐயாவின் கருத்தே எனது கருத்தும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜே தா! இந்த வலைப்பூவை நாம் தொடங்கி ஒரு சில மாதங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிறிய கால பகுதிக்குள், இதை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டி வருவது தனபாலன் ஐயாவின் பின்னூட்டம் தான். பதிவர் வாழ்க்கை என்று ஒன்று எங்களுக்கு இருப்பின் அதில் தனபாலன் ஐயா மறக்க முடியாத நபர்.

      Delete

உங்கள் கருத்து...