Monday 24 June 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 5

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 4

 ஆம்... அந்த நாளும் வந்தது!

USS ஆபிரகாம் லிங்கனில் தங்கப் போவது ஓர் இரவு தான் என்பதால் சக்கரம் வைத்த சிறிய பயண பொதி ஒன்றில் சில மாற்று உடைகளையும், காலை கடன்களுக்கு தேவையான பொருட்களையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து விட்டேன். மேலும் கப்பலில் ஏதேனும் வாங்குவதற்கு அவசியம் ஏற்படின் அங்கு அமெரிக்க டாலர்களை  மட்டுமே ஏற்று கொள்வார்கள் என்று SATCO ஏற்கனவே கூறியிருந்ததால், சில அமெரிக்க டாலர் நோட்டுக்களையும் முதல் நாளே வாங்கி வைத்து கொண்டேன். காலை 9 மணியளவில் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் படைவீரர்களுக்கான சிறப்பு நுழைவாயிலில் கூடவேண்டும் என்பதே எமக்கு இடப்பட்டிருந்த கட்டளை. 



காலை ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து விட்டேன். எழுந்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருந்தும் ஆழ்ந்த மூச்சுகள் விட்டு மனதை சாந்தமாக்கிக் கொள்ள முயன்றேன். எனது இருப்பிடத்தில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் வேக கட்டுபாடுகளை மதித்து செல்வதானால் 30 நிமிடங்களில் சென்று விடலாம். எனினும் எதிர்பாராது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விடுவதாக திட்டமிட்டுக் கொண்டேன்.  என் அலுவலகத்தில் இருந்து மேலும் 5 பேர் வருவதாக இருந்தும், அவர்களில் ஒருவரேனும் நான் வசிக்கும் பக்கம் வசிப்பதில்லை என்பதனால் நான் தனியாக காரில் விமான நிலையம் சென்று அங்கேயே வண்டியை விட்டு விட்டு மறுநாள் வரும் போது எடுத்துகொண்டு வீடு வரலாம் என்று முடிவு செய்தேன்.



8 மணியளவில் சற்று படபடப்பாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் குடும்பத்தாரிடம் விடை பெற்று வண்டியை கிளப்பினேன். இயல்பாக வண்டியை ஓட்டுவது சற்று கடினமாகவே இருந்தது. எனவே சற்று கூடுதல் கவனத்தோடு வழமையை விட மெதுவாகவே வண்டியை செலுத்தினேன். மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் 9:40 மணியளவில் விமான நிலையத்தின் சிறப்பு நுழைவாயிலை அடைந்தேன். அந்த நுழைவாயிலை காப்பவர்கள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய அமெரிக்க படையினர். வாயிலை அணுகி நான் வந்த நோக்கத்தை சொன்ன போது, அவர்களிடம் இருந்த ஒரு புத்தகத்தில் என்னுடைய பெயரை ஒப்பிட்டு சரி பார்த்த பின்னர் உள்ளே அழைத்து சென்று ஒரு பயணிகள் தங்கும் அறையில் உட்கார வைத்தனர். அங்கு என்னுடன் பயணம் செய்ய இருக்கும், ஏற்கனவே வந்து விட்ட ஒரு சிலரும் அமர்ந்திருந்தனர். அங்கிருந்தபடி கண்ணாடி சுவர்களின் ஊடாக தெரிந்த விமான ஓடுகளத்தை நோக்கினேன். அப்பொழுது தான் 'அது' கண்ணில் பட்டது...



என்னதான் விமான தாங்கி கப்பல்கள் தன்னிறைவு உடையதாக கட்டப்பட்டாலும் அவைகளில் இருந்து தினமும் கப்பலுக்கும் தரைக்குமான விமான போக்குவரத்து நடந்து கொண்டே இருக்கும். அதற்காக இயக்கப்படும் விமானகளை ஆங்கிலத்தில் 'Logistics Aircrafts' என்பார்கள். அவ்வகை விமானங்கள் தினமும் எடுத்து செல்லும் சரக்கை 'COD' என்பார்கள். அதன் விரிவு 'Carrier Onboard Delivery'. இந்த 'COD' இல் இடம் பெறுபவை அத்தியாவசிய சரக்குகள், தபால் மற்றும் மனிதர்கள். இந்த பணியை செய்யும் சரக்கு விமானங்களின் பிரதானமானது தான் C - 2 கிரெஹவுண்ட் (Greyhound). 'அது' தான் அங்கு இறக்கைகளை மடக்கி ஒரு தாய் பறவை போல் ஓடுகளத்தில் நின்றிருந்தது.



C - 2 கிரெஹவுண்ட்ஒரு விநோதமானா விமானம். அதை வடிவமைத்தவர்கள் குரூமேன் (Grumman) நிறுவனத்தினர். ஒரு விமானத்தின் விலை 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இரண்டு டர்போ ப்ராப் என்ஜின்களை கொண்டது. 26 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல வல்லது. 30 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க கூடியது. 343 நொட்ஸ் அதன் அதிக பட்ச வேகம். நீளம் 57 அடி 10 அங்குலம் ஆனால் அகலத்தில் தான் இதன் சிறப்பு இருக்கிறது. அதாவது நிறுத்தி வைக்கும் போது அகலம் 29 அடி 4 அங்குலம் ஆனால் பறக்க நினைக்கும் போது 80 அடி 7 அங்குலம். எப்படி சாத்தியம் என்கிறீர்களா? இந்த விமானத்தின் வடிவமைப்பு பறவைகளை பார்த்து அவைகளின் இறக்கை வடிவமைப்பின் உள்ளுயிர்ப்பை (inspiration) கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த விமானத்தால் இறக்கைகளை மடக்கி பின்னோக்கி திருப்பி வைத்து கொள்ள முடியும். விமான தாங்கி கப்பலில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தை சேமிப்பதற்கு ஏதுவாக  உருவாக்கப்பட்டது தான் இந்த வடிவம்.   
 

இந்த விமானத்தின் பின்புறத்தில் மிகப்பெரிய கீழ் நோக்கி இறங்கும் கதவு இருக்கிறது. இதன் மூலமாக தான் தபால், அத்தியாவசிய சரக்குகளான ஜெட் இயந்திரம் போன்றவற்றை ஏற்றுவார்கள். பயணிகளும் இதே கதவின் ஊடாக தான் சென்று அமரவேண்டும். மேலும் பயணிகள் இருக்கைகள் தேவைக்கு ஏற்ப இலகுவில் பொருத்தவோ களற்றவோ கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் இருக்கைகளை கழற்றி அவற்றுக்கு பதில் காயப்பட்டவர்களை கொண்டு செல்ல கூடிய படுக்கைகளை சில நிமிடங்களிலேயே பொருத்தி விட முடியுமாம். அவசியம் ஏற்படும் பொது 'Air drop ' என்று அழைக்கப்படும் வானத்தில் இருந்து பொருட்களை போடுவதற்கும்,  பாரசூட்டில் வீர்கள் குதிப்பதற்குமான வசதிகளும் இந்த விமானத்தில் இருக்கின்றன.


ஏற்கனவே நான் சேகரித்த தகவல்களின் படி நம்மை சுமந்து செல்ல இருக்கும் விமானம் அதுவாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். விமானத்தை சுற்றி சீருடையில் அமெர்க்க படை வீரர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். இப்போது மேலும் சிலர் நாம் உட்கார்ந்திருந்த அறைக்கு வந்து விடவே பேச்சு சத்தம் அதிகரிக்க தொடங்கியது. என்னை தவிர என் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் 5 பேர். அவர்களில் இருவர் கனடா நாட்டவர். ஒருவர் அமெரிக்கர், ஒருவர் பிரித்தானியர், ஐந்தாமவர் நியூசிலாந்து நாட்டவர். எங்களுடன் இணைந்து கொண்ட இன்னொருவர் அமெரிக்க தூரகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. அவர் வந்தவுடன் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார். இயல்பான நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர். அப்போது முதல் அவர் தான் எம் குழுவுக்கு தலைவர் போல் செயல்பட்டார். முதல் வேலையாக  எம் கடவுசீட்டுகளை (Passport) வாங்கி கொண்டு எம் சார்பில் குடியகழ்வு (Immigration) நடைமுறைகளை முடித்து கொண்டு வருவதாக சொல்லி சென்றார். நாம் நாட்டை விட்டு வேறொரு நாட்டின் கடல் எல்லையில் இருக்கும் கப்பலுக்கு செல்ல இருப்பதால் இந்த நடைமுறை. சென்றவர் 10 நிமிடங்களில் திரும்பி வந்து கடவுசீட்டுகளை கையளித்தார். இனி கூப்பிடும் போது போய் விமானத்தில் ஏறவேண்டியது தான் பாக்கி என்றார். என் வாழ்வில் முதன் முறையாக ஒரு விமான நிலையத்தில் VVIP போல் நடத்தபடுவதாக உணர்ந்தேன். நான் என் இருக்கையை விட்டு நகராமலேயே கடவுசீட்டில் ஸ்டாம்ப் அடித்து கொண்டுவந்து விட்டார்கள். 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!" எனும் கண்ணதாசனின் பாடல் வரி இந்த சந்தர்பத்துக்கு பொருந்துமா என்று யோசித்து கொண்டிருக்கையில், படையணிகளில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கான சீருடையில் கம்பீரமாக ஆறரை அடி உயர்ந்த மனிதர் ஒருவர் எம்மை நோக்கி வந்தார். வந்தவர் இன்னும் சில நிமிடங்களில் புறப்பட தயாராகுமாறு சொல்லிவிட்டு முதலில் இயற்கை உபாதைகளை கழிப்பதானால் அதை செய்து விடுங்கள்; விமானத்தில் அமர்ந்தால் எழுதிருக்க முடியாது என்றும் மேலும் நீங்கள் அணியவேண்டிய சில பிரத்தியேக உபகரணங்களை சில நிமிடங்களில் கொண்டுவருவார்கள்; அணிந்து கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு சென்றார். எனக்கோ மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது!  

 தொடருவேன்...
 

8 comments:

  1. C - 2 கிரெஹவுண்ட் விமானம் வியக்க வைக்கிறது...!

    பரபரப்பு எங்களுக்குள்ளும்... ஆவலுடன் தொடர்கிறேன்...

    // பறவையை கண்டான்... விமானம் படைத்தான்... //

    வரிகள் ஞாபகம் வந்தது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். அந்த விமானத்தை அருகில் இருந்து பார்த்த போது எனக்கு அந்த வரிகள் ஞாபகத்துக்கு வந்தன. :)

      Delete
  2. வியக்கவைக்கும் விமானப்பயணம் ..
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. Very interesting and waiting for next publish.

    ReplyDelete
    Replies
    1. Thanks Vishwa for the encouraging comments. :)

      Delete

உங்கள் கருத்து...